காந்தி டாக்ஸ் – சினிமா விமர்சனம்

priya
By
2 Min Read
Disclosure: This website may contain affiliate links, which means I may earn a commission if you click on the link and make a purchase. I only recommend products or services that I personally use and believe will add value to my readers. Your support is appreciated!

யார் பணக்காரர், யார் ஏழை என்பதை மறைக்க முடியாத பெருநகர வாழ்க்கையின் பிரதிபலிப்பாக மும்பையை களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் காந்தி டாக்ஸ். மனிதன் பேசாவிட்டாலும், இங்கு எப்போதும் பேசுவது பணம்தான் என்பதை வசனங்களே இல்லாமல் சொல்ல முயலும் ஒரு சைலண்ட் சினிமா முயற்சி இது.
கடும் வறுமையில் வாழும் மகாதேவ் (விஜய் சேதுபதி), இறந்த தந்தையின் அரசு வேலையைப் பெற்று தாயின் உடல்நலத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நியாயமான கனவோடு போராடுகிறார். ஆனால் அந்த வேலை கிடைக்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிஜம், அவனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கே செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகிறது.
மற்றொரு பக்கம், கோடீஸ்வர தொழிலதிபரான மோகன் போஸ்மேன் (அரவிந்த் சாமி), வணிக எதிரிகளின் சூழ்ச்சியால் தன் சொத்துகளையும் கனவு திட்டத்தையும் இழந்து, கடன் நெருக்கடியில் சிக்குகிறார். வறுமையும் செல்வமும் – இரண்டு எதிர் துருவங்களில் நிற்கும் இந்த மனிதர்கள் சந்திக்கும் தருணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களே கதையின் மையம்.
ரூ.100, ரூ.2000 நோட்டுகளில் சிரித்தபடி இருக்கும் காந்தி, மனிதர்களின் பேராசை, குற்றவுணர்வு, அவமானம், ஏமாற்றம் ஆகியவற்றை மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பது போல படம் நகர்கிறது. “நீயே மாற்றமாக இரு” என காந்தி சொன்ன வாசகம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போதோ மறந்து போன உண்மையாக மாறியிருப்பதை படம் மறைமுகமாக பதிவு செய்கிறது.
விஜய் சேதுபதி, பசியோடு காதலையும் வாழ்க்கையையும் எதிர்கொள்ளும் இளைஞனாக வழக்கம்போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மௌன தருணங்களில் அவரது முகபாவனைகளே வறுமையின் வலியை நமக்கு உணர்த்துகின்றன.
செல்வந்தராக இருந்த நிலையிலிருந்து அனைத்தையும் இழந்து தவிக்கும் மனிதனாக அரவிந்த் சாமியும் கவனம் ஈர்க்குகிறார். அவரது உடல் மொழி மாற்றங்கள், வீழ்ச்சியின் மன அழுத்தத்தை நன்றாக கடத்துகின்றன.
காதல் காட்சிகளில் மட்டுமே தோன்றும் அதிதி ராவ், க்ளிஷே கதாபாத்திரமாக இருந்தாலும் சில உணர்வுபூர்வ தருணங்களில் நேர்மையான நடிப்பை வழங்குகிறார். திருடராக வரும் சித்தார்த் ஜாதவ், சார்லி சாப்ளின் பாணியில் சிரிப்பை வரவழைக்க முயன்றாலும் முழுமையாக வெற்றி பெறவில்லை.
கரண் பி. ராவத்தின் ஒளிப்பதிவு, குறுகிய வீடுகள், இரவு நேர மும்பை பகுதிகள் என காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. வசனங்கள் இல்லாத இடங்களை ஏ.ஆர். ரஹ்மானின் இசை பல இடங்களில் தாங்கிப் பிடிக்கிறது. குறிப்பாக காதல் பாடல் மனதை வருடினாலும், பின்னணி இசை சில காட்சிகளில் அதிகமாகத் திகட்டுகிறது.
மௌன மொழியில் உணர்வுகளைச் சொல்லும் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால் தேவையற்ற காமெடிகள், நீளமான காட்சிகள், மெதுவாக நகரும் முதல் பாதி ஆகியவை திரைக்கதையின் பலவீனமாக மாறுகின்றன. பெரிய நடிகர்கள் இருந்தும் கதை சொல்லலில் ஏற்பட்ட தடுமாற்றம், எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
என்னதான் குறைகள் இருந்தாலும், வசனங்களே இல்லாமல் பணம் பேசும் உலகின் கையைக் கடிக்கும் உண்மையைச் சொல்ல முயன்ற துணிச்சலுக்காக காந்தி டாக்ஸ் ஒரு கவனிக்கத்தக்க கலை முயற்சியாகவே நிற்கிறது. நுட்பமாக ரசிப்பவர்களுக்கான படம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *